சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த 2008 நவம்பர் மாதம்.
கல்லூரி மாணவர்கள் உதட்டிலும், வீட்டின் டிவி பெட்டி வாயிலும் கேட்கும் ஒரே பாடல் வரி "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை". ஆம் அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் தான் வாரணம் ஆயிரம்.
இளசுகள், ஒரு தலைக் காதலர்கள் என அனைவரையும் சுண்டி இழுத்தது அந்தப் படம். 6 பேக், காதல் பாடல்கள், கவுதம் மேனன் என்பவை தான் அந்த ஈர்ப்புக்குக் காரணங்கள்.
அன்று ஒரு மழை நாள். கல்லூரி விடுமுறை நாளும் கூட. நானும் என் நண்பன் சௌந்தரும் சத்யம் திரையரங்கில் அந்தப் படத்திற்கு புக் செய்திருந்தோம்.
நல்ல மழை, காற்று, படமும் காதல் படம் என்பதால் உள்ளுக்குள் ஒரே சாரல்.
அம்மா, "இந்த மழைல படம் அவ்ளோ முக்கியமா? போனா போகட்டும் 120 ரூபா தானே!" என்றார்.
அப்பாவிடம் அடம் பிடித்து, சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து 18கே பஸ்சில் குடை சொட்ட ஏறினோம் நானும் சௌந்தரும்.
சில மணி நேரம் முன்னரே திரையரங்கைச் சென்றடைந்தோம். படம் ஆரம்பித்தது, காதல் மழையில் நனைந்தோம். படம் முடிந்து வெளியில் வந்தோம், இருட்டியது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மழையும் விடவில்லை.
குடைகளை விரித்தோம். மவுண்ட் ரோடு பஸ்டாண்டில் 18கே பஸ்சிற்காகக் காத்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்தோம், சிறிது தூரம் ஊர்ந்து சென்ற பஸ், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பின்னர் அண்ணாசாலையில் இறங்கி குடையை விரித்து நடக்கத் துவங்கினோம்.
அரங்கநாதர் சுரங்கத்தில் மூழ்கிய நிலையில் ஒரு பேருந்தைக் கண்டோம். அந்த இரவில் பயம் கூடியது. சுரங்கத்தின் இடது புறம் இரு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் நடக்கத் துவங்கினோம். மழை எங்கள் மீது துப்பாக்கியை ஏந்தி நிற்பது போல், இடுப்பளவு தண்ணீரில் கைகளைத் தூக்கிக் கொண்டு நீந்தி வீடு போய் சேர்ந்தோம்.
அம்மா புலம்பிய படியும், திட்டிய படியும் சோறு வைத்துக் கொண்டிருந்தார். என் காதுகளில் மட்டும்
இன்னும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை "ஒலித்துக்கொண்டிருந்தது.
No comments:
Post a Comment