Sunday, 30 August 2020

வாரணம் ஆயிரம்!

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த 2008 நவம்பர் மாதம்.

கல்லூரி மாணவர்கள் உதட்டிலும், வீட்டின் டிவி பெட்டி வாயிலும் கேட்கும் ஒரே பாடல் வரி "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை". ஆம் அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் தான் வாரணம் ஆயிரம்.

இளசுகள், ஒரு தலைக் காதலர்கள் என அனைவரையும் சுண்டி இழுத்தது அந்தப் படம். 6 பேக், காதல் பாடல்கள், கவுதம் மேனன் என்பவை தான் அந்த ஈர்ப்புக்குக் காரணங்கள்.

அன்று ஒரு மழை நாள். கல்லூரி விடுமுறை நாளும் கூட. நானும் என் நண்பன் சௌந்தரும் சத்யம் திரையரங்கில் அந்தப் படத்திற்கு புக் செய்திருந்தோம்.
நல்ல மழை, காற்று, படமும் காதல் படம் என்பதால் உள்ளுக்குள் ஒரே சாரல்.
அம்மா, "இந்த மழைல படம் அவ்ளோ முக்கியமா? போனா போகட்டும் 120 ரூபா தானே!" என்றார்.
அப்பாவிடம் அடம் பிடித்து, சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து 18கே பஸ்சில் குடை சொட்ட ஏறினோம் நானும் சௌந்தரும்.

சில மணி நேரம் முன்னரே திரையரங்கைச் சென்றடைந்தோம். படம் ஆரம்பித்தது, காதல் மழையில் நனைந்தோம். படம் முடிந்து வெளியில் வந்தோம், இருட்டியது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மழையும் விடவில்லை.

குடைகளை விரித்தோம். மவுண்ட் ரோடு பஸ்டாண்டில் 18கே பஸ்சிற்காகக் காத்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்தோம், சிறிது தூரம் ஊர்ந்து சென்ற பஸ், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பின்னர் அண்ணாசாலையில் இறங்கி குடையை விரித்து நடக்கத் துவங்கினோம்.

அரங்கநாதர் சுரங்கத்தில் மூழ்கிய நிலையில் ஒரு பேருந்தைக் கண்டோம். அந்த இரவில் பயம் கூடியது. சுரங்கத்தின் இடது புறம் இரு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் நடக்கத் துவங்கினோம். மழை எங்கள் மீது துப்பாக்கியை ஏந்தி நிற்பது போல், இடுப்பளவு தண்ணீரில் கைகளைத் தூக்கிக் கொண்டு நீந்தி வீடு போய் சேர்ந்தோம்.

அம்மா புலம்பிய படியும், திட்டிய படியும் சோறு வைத்துக் கொண்டிருந்தார். என் காதுகளில் மட்டும்
இன்னும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை "ஒலித்துக்கொண்டிருந்தது.

கல்லூரி நினைவுகள்!

முகநூல் பக்கம் கல்லூரி நண்பனின் பிறந்தநாள் நோட்டிபிகேஷன் பார்த்தேன் .

கல்லூரி முடிந்து வேலை கிடைத்து வாழ்க்கை நகர்கையில், நம்முடன் படித்த நாற்பது பேரும் நம்முடன் பயணிப்பதில்லை. அதில் இரண்டு மூன்று பேர் எப்போதும் நம் வாழ்வில் உடன் வருவார்கள். அவர்களிடம் மட்டும் தான் அவ்வப்போது பேசிக் கொண்டிருப்போம்.

முகநூல் பதிவைப் பார்த்து அவனுக்கு வாட்ஸாப்-ல் வாழ்த்து அனுப்பி, அவனிடம் நலம் விசாரித்துவிட்டு, கல்லூரி குரூப்பில் வாழ்த்து அனுப்பி மற்றவர்களுக்கும் இவன் பிறந்தநாளைத் தெரிவித்தேன்.

தெரிவித்து விட்டுக் கடைக்குச் செல்ல வண்டி எடுக்க, என்னுடன் பயணித்தன கல்லூரி நினைவுகள் .

கல்லூரியில் நான்கு வருடம் தினமும் எட்டு மணி நேரம் கழித்து, நான்கு மணியளவில் விடைபெறும் நாட்கள் நெஞ்சை அழுத்தியது. காலம் எனும் பேருந்தில் நிறைய பேருடன் பயணிக்கிறோம். ஆனால் அவர் அவர் இடத்தில் இறங்க ஞாபகங்களை மட்டும் சுமந்து இறங்காமல் போய்க்கொண்டே இருக்கிறோம்.

கல்லூரிப் பருவம் என்பது ஒரு விதமான அனுபவம். மீசை முளைத்த கர்வம் கொண்டு நாம்தான் என்ற ஒரு விதமான உணர்வு ஒரு புறம் இருக்க, சுவாரஸ்யத்திற்கும் பஞ்சம் இல்லை.முதல் சரக்கு, முதல் காதல், முதல் தம்மு என ஒவ்வொருவருக்கும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கும் ஒரு இடம்.

முதல் நாள் கல்லூரி, இன்றும் நினைவில் இருக்கிறது. காலேஜ் பஸ்சில் சீனியர்களுடன் ராகிங் பழகி, நட்புண்ட நினைவுகள் என்றும் மறக்க முடியாது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூட இப்போது தெரியாது,முகநூல் அப்டேட்-ல் பார்க்கக்கிடைத்த சிலர் தவிர.

படிக்கப் பிடிக்காமல் அரியர் வைத்து, அந்த அரியர் பரீட்சைக்குத் தனி நாள் ஒதுக்கி மரத்தடியில் படித்த கணங்கள் என்றும் மறக்கமுடியாது. இன்றைக்கு நான் வாழ்த்து தெரிவித்த நண்பனும் நானும் நிறைய அரியர் பரீட்சையில் பரிட்சியமானவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

கல்லூரி வளாகம், கான்டீன், HOD, பிடித்த ஆசிரியர்கள் என்று அனைவரும் இந்தப் பயணத்தின் காற்றில் என் இதயத்தில் வீசுகிறார்கள் .
 
இன்றும் அந்த கான்டீன் வெஜிடபில் பிரியாணி வாசம் நினைவிருக்கிறது.

பரீட்சை, செமினார், ப்ராஜெக்ட் மட்டும் அல்லாது நம் முதல் ஆசையும் நினைவிற்கு வருகிறது. அந்தப் பருவத்தில் ஹார்மோன்கள் இஷ்டத்துக்கு வேலை செய்யத் தொடங்குமே. அப்படி வேறு டிபார்ட்மென்ட் பெண்ணின் மீது ஒரு அவா இருந்தது. அந்த நாட்கள் நினைவிற்கு வந்தன.

உணவு வேலையில் அவள் கிளாஸ் சென்று அமர்வது, அவள் செல்லும் போது என் பெயரை ஒலிக்கச்செய்வது என அது ஒரு அழகிய மழைக் காலம் தான்.

அவள் பெயரையும் என் பெயரையும் சேர்த்து கல்லூரி வளாக மரத்தில் கிறுக்கிய நண்பன், அந்த மரம் இன்னும் இருக்குமா? என் பெயர் அவள் பெயர் மறையாமல் இருக்குமா இல்லை அதற்கு மேல் வேறு இரண்டு பேர்கள் திருத்தி எழுதப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. கல்லூரி முடிந்த பிறகும் என் பள்ளி நண்பனுடன் அவள் ஏரியா அய்யப்பன் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். பல மாதங்கள் சென்றதில், ஒரே ஒரு சனிக்கிழமை அவளைக் கோவிலில் பார்த்து முகம் வேர்த்து, வழிந்து சிரித்து திரும்பி இருக்கிறோம் நங்கள்.

இன்று அவளுக்குக் கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை. முகநூல் பழக்கம் தொடர்கிறது அவ்வளவுதான்.

கல்லூரி நாட்களை நன்றாக அனுபவித்து, எப்படியோ அரீயர்களை க்ளியர் செய்து வேலையில் சேர்ந்து, அந்தத் தருணங்களை நினைக்கையில் மனதோடு ஒரு மழைக்காலமாய் என்றும் அது இருக்கிறது .

காலம் எனும் பேருந்து வேகமாகத்தான் போய்க்கொண்டிருக்கும். அவ்வப்போது ஒரு இடைவேளை விட்டு அந்தத் தருணங்களை நினைத்துப் பார்த்தால் சில நேரம் சில்லிட்டு, சிலிர்த்து நாம் மகிழலாம் என்றும்!

Saturday, 29 August 2020

அலை!

ஓசை உண்டு உனக்கு, 
கரையைச் சேரும் வரை.
உணர்வுண்டு உனக்கு, 
மண்ணைத் தொடும் வரை.
தாய்மை உண்டு உனக்கு, 
படகுகளைத் தாலாட்டும் வரை.
ஓய்வில்லை உனக்கு,
உலகம் அழியும் வரை!
---------------
காத்துக்கொண்டிருக்கிறது கரை-
எப்பொழுது தன்  காதலை ஏற்றுத் தன்னுடன் 
அழைத்துச் செல்லுமோ அலை!

Tuesday, 25 August 2020

மனித இயந்திரம் பெண்!


"வாங்க உட்காருங்க", சொல்லி தண்ணி கொண்டு வந்தாங்க என்னோட அத்தை.

கல்யாணம் முடிஞ்சி, நான் எப்போ அத்தை வீட்டுக்கு போனாலும்  அந்த  வீட்ல கடிகாரம் கூட நின்னு பாத்துருக்கேன், ஆனா இவங்க நின்னோ உட்காந்தோ பாத்ததில்லை. ரொம்போ முடியல காச்சல் மாதிரினா மட்டும் தான் முடங்கிக்  கெடப்பாங்க.

காலைல அவங்க வீட்டுக்குப் போனா பம்பரம் மாதிரி சுழன்று சுத்திகிட்டு இருப்பாங்க.

"அம்மா பால்" குரல் கேட்கும், உடனே பாத்திரம் எடுத்துட்டுப் போவாங்க. குப்பை அள்ள ஆட்கள் வருவாங்க அதுக்கும் இவங்க தான் போவாங்க ..முடிச்சு வந்து காலை சாப்பாடு பண்ணுவாங்க. எல்லாருக்கும் பரிமாறிட்டு அவங்க சாப்பிட ஒரு 10.30 மணி ஆய்டும். அடுத்து டீ போட்டுத் தருவாங்க எல்லாருக்கும். ஒரு 11.30 மணிக்கு அப்டியே மதிய நேரம் சமையல் ரெடி பண்ணுவாங்க. நடுவுல அப்போ அப்போ போன் வரும், கிட்சன்-ல கொண்டு போய் பேசிட்டே சமையல் வேல பாப்பாங்க. அத முடிச்சு எங்க எல்லாரையும் உட்கார சொல்லிட்டு பரிமாறி முடிக்க 3 மணி ஆகிடும். அப்புறம் மீதம் இருக்கறத எடுத்துப் போட்டு சாப்பிட்டு பாத்திரம் தொலக்கப் போயிடுவாங்க.

கொஞ்ச நேரத்துக்கு உட்காரலாம்-னு வருவாங்க, மாமா தண்ணி கொடுனு கேப்பாங்க, இல்லனா மச்சான் டீ போடுங்கனு கேப்பாரு, அப்டியே இரவு 10 மணி வர கிட்சன் பணிவிடைகள்.

அப்டியே ஓடிரும் அவங்க தின வாழ்க்கை .

எனக்கும் தோனும், தினமும் இதான் வாழ்க்கைனு சுழலற அவங்களுக்கு சலிப்பே இருக்காதா??

அவங்க படிச்சது M A ஆங்கில இலக்கியம், அதுக்கும் அவங்க இப்போ பண்ற வேலைக்கும் என்ன சம்மந்தம். அவங்களுக்குனு ஒரு ஆசை வேலைனு இல்லாம, இப்டி ஓடிட்டே இருக்காங்க குடும்பத்துக்காக. சுயநலம் இல்லாத ஒரு இயந்திரம் தான் சில பெண்கள்னு தோணும் அதுல இவங்க ஒருத்தங்க.

எங்க வீட்டுல வேல செய்ற அக்கா காலைல தினமும் 8.30 மணிக்கு வந்துருவாங்க. 11 மணி வர சமையல் கூட்டுறது தொடைக்கறது பாத்ரம் தேய்க்கறதுனு வேல பாத்துடே இருப்பாங்க. "கொஞ்சம் 10 மணி ஆனா சொல்லுங்க: இலவச அரிசி பருப்பு தர்றாங்க போயி வாங்கணும். என் பையன் இந்த வேலைலாம் செய்யமாட்டான். வீட்டுக்காரரு ஒரு சீக்காளி, படுத்த படுக்கையா இருக்காரு"-னு  சொன்னாங்க. அஞ்சு வீட்ல வேல செய்றேன் மதிய சாப்பாடுக்கு 4 மணி ஆயிடுதுன்னு சொல்றாங்க. கேக்கவே கஷ்டமா இருந்துச்சு.

எப்படி அவங்க வீட்டையும் பாத்துட்டு, எல்லா வீட்டு வேலையும் பாக்குறாங்கனு தோணும். இப்படியும் நாட்ல பலபேர் இருக்காங்களே!

நம்ம தெருக்கள்ல தூய்மைப் பணியாளர்கள் கொஞ்ச பேர் தினமும் குப்பைகளை அள்ளிட்டுப் போவாங்க.

பாவம் அவங்க வீட்டுக் குப்பைகளை அள்ளுறது யாருனு தெர்ல. அவங்க வீட்டு அடுப்பெரிய, இவங்க இப்டிலாம்  மத்த குப்பையை அள்ளுறாங்கனு தோணும். அதிலும் முக்காவாசி பேர் ஒரு தெருவுக்கு ஒரு ஆண் இரண்டு பெண்கள் வராங்க. வயித்து பிழைப்பிற்கு என்னலாம் பண்றாங்க. இவங்க வீட்டுக்குப் போய் இதே கைகள்ல சாப்பிடணும், குழந்தையை தூக்கணும் எவ்ளோவோ இப்டி சகிச்சுக்கிட்டு இதெல்லாம் பண்றாங்கனு தோணும்.

அப்டி ஒரு அம்மா அவங்க ரெண்டு பெண் குழந்தைகளோட தினமும் ஒரு தெருல குப்பை அள்ளறாங்க .

அந்த குழந்தையை வெயில் படாம ஒரு ஓரமா உட்காரவெச்சிட்டு இவங்க வண்டி தள்ளி குப்பை அள்ளிட்டு, அந்த குழந்தைங்களை அப்டியே கூட்டிட்டுப் போறாங்க. கொடுமையான வாழ்க்கை இது அப்டினு தோணும்.

இவங்க எல்லாருமே ஓட்றது அவங்க அவங்க வீட்டுக்காகத் தான் .

இவங்க எல்லாருமே மனிதப் பெண்கள்னு சொல்லமுடில. மனித யந்திரமா தான் என் கண்ணனுக்குத் தெரியறாங்க. இன்னும் சொல்லப்போனா அவங்க வாழ்க்கையத் தொலைச்சிட்டு மத்தவங்க வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ற தெய்வங்கள் தான்!

 

Monday, 24 August 2020

பண்டிகை...

பண்டிகையை நாம் உள்ளே கொண்டாட 
வெளியே திண்டாடுகிறார்கள் 
கடைத்தெரு வியாபாரிகள் !

Friday, 21 August 2020

காலத்தின் வேகம்!

பிள்ளைகள் வாழ்க்கை  தழைக்க 
விரதம்  இருந்து வேண்டுகிற அன்னை 
உடல் குன்றி படுக்கையில் இருப்பின் 
விரதம் இருந்து வேண்டுகின்றனர் பிள்ளைகள் ..
காலத்தின் வேகம்...

வாழ்க்கை!

அறுந்த செருப்பணிந்து 
கோணக்காலில் நடந்து வந்த 
முதியவரைக் கண்டு 
யோசிக்கிறது மனது 
அவரது நேர்க் கால் வாழ்க்கையைப் பற்றி !

சங்கு!

பிரித்தெடுத்துவந்த சங்கில் 
கேட்டது பிரிவின் ஓசை... 
கடல்!

Wednesday, 19 August 2020

கிராமத்து வாசம்!

நகரங்களில் இல்லாத கிராமத்து வாசம் 
வீசுகிறது 
சில நகர வீடுகளில் ...
பிழைப்பிற்காகக் கிராமத்தைத் துறந்த 
மக்கள் வசிப்பதினால்! 

அழகு!

ஈன்ற குழந்தையுடன் 
கொஞ்சி விளையாடும் அன்னையர் 
அனைவரும் அழகுதான் !

நாணம்!

காதலியுடன் கைப்பேசியில் பேசிக்கொண்டு 
ஜன்னல் கம்பிகளில்  ஒட்டிக்கொண்டிருக்கும் 
ஒரு சிறு மழைத்துளியைச் சுண்டிவிடுகிறான் 
அது பல துளிகளாய் மண்ணில்  கலந்தன... 
அவனது நாணம்! 

என் வழிப்பாதையில்...

என் வழிப்பாதையில் 
ஒரு  பட்டாம்பூச்சி 
வேகமாய் பறந்தது 
வேகத்தடையென  
நின்று , நடந்தேன் ஒரு கணம் ! 

Thursday, 13 August 2020

மூடப்பட்டிருந்த!

மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தில்
வரிசையில் சென்று கொண்டிருந்தன 
சின்னஞ்சிறு எறும்புகள்..
உணவைப் பருகியவாறு குதித்துக்கொண்டு ஓடியது
அழகிய அணில் கூட்டம்..
யாருமில்லாத அறையில்
சத்தம் போட்டுக்கொண்டிருந்தன
இரண்டு பல்லிகள்,
மேஜைமேல் வைத்திருந்த புத்தங்கங்களை
வாசித்துக்கொண்டிருந்தன
வெளிச்சமும் இருட்டும்!
---------------------------------------------------------------
மூடப்பட்டிருந்த பூங்காவில்
ஆடிக்கொண்டிருந்தன இரண்டு பறவைகள்..
ஓடிக்கொண்டிருந்தன இரண்டு அணில்கள்..
நடந்துகொண்டிருந்தன பல எறும்புகள்
பறந்துகொண்டிருந்தன சில இலைகள்
இவற்றை ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருக்கிறான்

சிறுவன் ஒருவன் வாயிற்கதவை பிடித்தபடி! 

Wednesday, 12 August 2020

எலுமிச்சை!

புளித்து நீ சுவைக்க, 
கண்களைச்  சுருக்கினாலும்..
உன் மேல் கொண்ட இச்சை குறைவதில்லை.. எலுமிச்சையே...!
-------------
அறுசுவையில் ஒரு சுவையாய் நீ இருக்க 
ஐஞ்சுவை கலந்து பருகினாலும் 
உன் மேல் கொண்ட இச்சை குறைவதில்லை...
எலுமிச்சையே!
--------------

Sunday, 9 August 2020

புலம்பல்கள்!

குக்கர் சத்தத்தையும் மீறிக்
கேட்டுக்கொண்டிருக்கிறது
அவளின்
அழகிய புலம்பல்கள் ...
இல்லை அவை காலைநேர
பக்தி பாடல்கள் !

கிசு கிசுத்த காதல் குரல் ...

அவளின்  கிசு கிசுத்த காதல் குரலை
அவன் மட்டும் கேட்கவில்லை,
கேட்டுக்கொண்டிருந்தது
இரண்டு கைப்பேசிகளும்
ஒரு போர்வையும் !

தறி!

பஞ்சையும் நூலையும் கோர்த்து
நெய்து முடித்தான்  
வறுமை  எனும் ஆடையை..
அதை உடுத்த வழியின்றி
தொடுத்த கைகளில் தடவிப்பார்த்துக
கேட்கத்துவங்கினான் தறியிசையை !

முண்டியது கூட்டம்!

முண்டியது கூட்டம் 

திருமணக் கூடத்தில் 
வளைகாப்பு மாடத்தில் 
கசாப்புக் கடைகளில் 
காய்கறிச் சந்தையில் 
அரசியல் மாநாட்டில் 
பள்ளி வாசலில் 
கல்லூரி வளாகத்தில் 
கோவில் கருவறையில் 
புனித தேவாலயத்தில் 
மசூதிப் பள்ளியில் 
ரேஷன் கடைகளில் 
மெரினா கடற்கரையில் பொருட்காட்சி அரங்கில் 
சர்க்கஸ் கூடாரத்தில் 
மாநகராட்சி அலுவலகத்தில் 
விசா அலுவலகத்தில் 
சினிமா ஷூட்டிங்கில் 

முண்டியது கூட்டம்..... 

இறுதி ஊர்வலத்தில் 

முண்டியது கூட்டம்......
வாழ்க்கை எனும் பெரும் போராட்டத்தில்! 

Friday, 7 August 2020

விசிறி!

என் புழுக்கத்தைப் போக்கி 
களைப்பாறச் செய்தாய் அன்று 
உன் புழுக்கத்தைப் போக்க 
ஆள் இல்லை இன்று...
தாம்பூலப்பை இறுக்கத்தில்!
............................................................
அகல் விளக்கேற்றி,
உன்னை கையில் ஏந்தி அணைத்துறங்கும்
காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்,
குளிர்ந்த செயற்கைக் காற்றின் புழுக்கத்தில்!

கவிஞன் தேவையில்லை...

கவிஞன் தேவையில்லை
 உன்னை வருணிக்க , 
பாமரனாய் இருந்தால் கூடப் போதும் ...!

பிரகாசம்!

சூரியனின் கண்களையே பறிக்கும் 
ஒரு பிரகாசம் 
உன் முகம்!

கசாப்புக்கடை!

ஈ அமரும் கூச்சத்தைக் காலால் எட்டி உதைக்கும் 
ஆட்டைப்  போலத்தான் வாழ்க்கையும்,
பல ஈக்கள் மொய்க்க எட்டி உதைத்துப் போய்க்கொண்டே
இருக்கிறோம் மரணம் எனும் 
கசாப்புக்கடையை நோக்கி! 

கடந்த காலங்கள்!

மழை ஓய்ந்த பின்னும்
அதன் நினைவுத்துளிகளாய் மழைத் துளிகள்
காதல் ஓய்ந்த பின்னும்
அதன் நினைவுத்துளிகளாய் கடந்த காலங்கள்  ....
இன்னும் எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுதும் !

Saturday, 1 August 2020

இறைவா!

இறைவா என்னைக் காப்பாற்று
இறைவா என்னைக் கொன்றுவிடு
இறைவா என்னைப் பாஸ் பண்ணிரு
இறைவா எனக்குக் கல்யாணம் நடக்கனும்
இறைவா என் காதல் கைகூடனும்
இறைவா எல்லாரும் நல்லா இருக்கனும்....

இப்படி அனைத்து தரப்பு மனுக்களையும் வாங்கிக்கொண்டு
அரசியல் வாதி போல்
அசராமல் சிரித்துக்கொண்டிருக்கிறான் இறைவன்...
ஆனால் இவன் 
'இறைவன்' ஒரு நல்ல அரசியல் வாதி!

ஒரு கவிஞனின் அலப்பறைகள்!

அமாவாசை உணவில் கொழுத்த காக்கை ஒன்று
எச்சமிட்டது,
நான் உணவு பரிமாறிய அதே கைகளில்.....
அது பெயரெச்சமா, வினையெச்சமா
என்று தெரியவில்லை
அடுத்த அமாவாசை அன்று கேட்க வேண்டும்!

நிலா!

என் வீட்டுக் கண்ணாடி ஜன்னலில் 
தெரிகிறது ஒரு அழகிய உருண்டை ...
அது வட்டமாக 
ஆவி மறைத்த இட்லி போல  
அழகிய பெண்ணின் வளையல்  போல 
 உலக உருண்டை போல  
 பெரிய அளவு கோலி போல 
மங்கிய சூரியன் போலவும் 
உள்ளது .
அதன் பெயர் நிலவாம்!